தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 15ஆம் தேதி முதல் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு பள்ளிகளில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி வருகின்ற 15ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது இதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்தார்.
பெரியநாயகபுரத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, கோரம்பள்ளம் அரசு உதவி பெறும் பேரின்பம் அம்மாள் நடுநிலைப்பள்ளி, மறவன்மடம் ஊராட்சி அந்தோணியார்புரம் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி, புதுக்கோட்டை புனித அகஸ்டின் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி அங்கு அமைக்கப்பட்டுள்ள காலை உணவு தயாரிப்பதற்கான சமையலறையை பார்வையிட்டார்.
மேலும் சமையலறைக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் உள்ளனவா என்பது குறித்தும், உணவு தயாரிப்பு பணிகளில் ஈடுபடக்கூடிய மகளிர் சுய உதவி குழுவினரிடம் தரமானதாக காலை உணவு தயாரிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் காலை சிற்றுண்டி என்பது காலை 7.30 மணிக்கு தயார் செய்யப்பட்டு எட்டு மணியிலிருந்து வரக்கூடிய மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது கல்வித் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


