தூத்துக்குடியில் ரயில்வே தண்டவாள பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாயில் 2 கிலோமீட்டர் தூரம் உள்ள அடைப்பை சரி செய்யும் பணிகளை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளின் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மாநகராட்சி 25, 26 ,27 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளான ஒன்றாம் கேட், எஸ்.எஸ் பிள்ளை மார்க்கெட், மட்டக்கடை, சந்தியாகப்பர் கோவில் தெரு, காளியப்பர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து சுகாதாரக் கேடு ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து வரப்பட்ட புகாரை அடுத்து இந்த கழிவு நீர் கால்வாய் முறையாக உள்ளதா என்பது குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது தூத்துக்குடி ரயில்வே தண்டவாள பகுதியான கடைசி பகுதியில் உள்ள கால்வாயில் சுமார் 2 கிலோ மீட்டர் தூர அளவுக்கு அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாத நிலை இருப்பதை கண்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து ரயில் நிலைய அதிகாரிகள் அனுமதி பெற்று அந்த கால்வாயை முறையாக தூர்வாரி நிரந்தரமாக இனி மழை பெய்தால் வீடுகளுக்குள் கழிவு நீர் பூகாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கழிவு நீர் நேரடியாக கரிக்களம் காலனி வழியாக கடலுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.


