மாணவ, மாணவிகள் நூலகம் செல்ல வேண்டும், பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ‘என் கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (18.05.2024) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2023-24ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் ‘என் கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையேற்று, மாணவ, மாணவியர்களுடன் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்ததாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை மேம்படுத்தவும், இடைநிற்றல் எண்ணிக்கையை குறைக்கவும் ‘என் கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் முன்னெடுப்பு திட்டம் வருடந்தோறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி 2 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக நமது மாவட்டத்தின் 24.04.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 2ம் கட்டமாக இன்று தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கு உதவிடும் பொருட்டு 2ம் கட்டமாக உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது. பள்ளியில் நீங்கள் பன்னிரெண்டு வருடம் நீண்ட நெடிய பயணம் செய்து படித்து வெற்றி பெற்றுள்ளீர்கள். அடுத்து வரும் 3 ஆண்டுகள் உங்கள் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கப்போகிறது. இந்த பன்னிரெண்டு வருடம் நீங்கள் கற்ற கல்வி ஒரு அடிப்படைக் கல்விதான். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வருடத்திற்கு 8 லட்சம் மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறுகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் சுமார் 18,000 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். பன்னிரெண்டாம் வகுப்பு தகுதியை வைத்து வேலை கிடைப்பது கடினம். குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தால்தான் நல்ல வேலைக்கு போக முடியும். உயர்கல்வி முடித்து தகுதியின் அடிப்படையில் வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது சுயதொழில் தொடங்க வேண்டும். மாணவர்களின் நலன்காக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
லட்சக்கணக்கான பேர் போட்டித்தேர்வு எழுதினாலும் சில நூறு பேருக்குதான் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எனவே தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளது, எந்த பாடப்பிரிவு எடுத்து படிக்கலாம், எந்த பாடப்பிரிவு தேர்ந்தெடுத்து படித்தால் வேலைவாய்ப்பு எளிதில் கிடைக்கும், பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து இந்நிகழ்ச்சி மூலம் பல்வேறு கல்வியாளர்கள், வல்லுநர்கள் உங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்குவார்கள். உங்களுக்கு விருப்பமான பாடத்தை படியுங்கள். பட்டப்படிப்பு படித்தால் மத்திய, மாநில அரசு பணிகள் மற்றும் வங்கிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை எழுதலாம்.
பொறியியல் கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி பயில விருப்பமுள்ளவர்கள் இணையத்தளம் வழியாக விண்ணப்பம் செய்ய ஏதுவாக வ.உ.சி கல்லூரி அருகில் உள்ள ஏ.பி.சி வீரபாகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு இருக்கிறது.
இட ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தினை அரசே செலுத்துகிறது. மேலும், உயர்கல்வி படிப்பதற்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
நீங்கள் தினசரி நாளிதழ் படித்து பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். நூலகம் செல்லும் பழக்கத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய ஆளுமைத்திறன் உள்ளிட்ட ஒட்டுமொத்த திறமையையும் வளர்க்கும்விதமாக 3 வருட கல்லூரி படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்து வெளிநாடு சென்று மேற்படிப்பு படிப்பதற்கும் அரசு உதவித்தொகை வழங்குகிறது. அதுபோல சுயதொழில் தொடங்கவும் 35 சதவீதம் மானியத்தில் வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.
தனியார் கல்லூரியில் படிப்பதற்கும் வங்கிக்கடன் பெற்று பயன்பெறலாம். குடும்பத்தில் முதல்தலைமுறை கல்லூரி சென்றுவிட்டால் உங்களுடைய பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு செல்லலாம். முதல்தலைமுறை பட்டதாரிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. உயர்கல்வி பயில அரசு பல்வேறு வகைகளில் ஊக்கத்தொகை அளிக்கிறது. ஆகையால் மாணவ, மாணவியர்கள் அரசின் சலுகைகளை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்தார்கள்.
மேலும், கலை மற்றும் அறிவியல், வேளாண்மை, பொறியியல், சட்டம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி பாடப்பிரிவுகள் குறித்தும், கல்வி உதவித்தொகை, வங்கி கடன் குறித்தும், சுயதொழில் தொடங்குவது குறித்தும், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது குறித்தும் பல்வேறு வழிகாட்டுதல்களை துறை சார்ந்த வல்லுநர்கள், கல்வியாளர்கள் மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) விக்னேஷ்வரன், பல்வேறு துறை சார்ந்த கல்வியாளர்கள், வல்லுநர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


