டி. எஸ். துரைராஜ் (31 டிசம்பர் 1910 – 2 சூன் 1986) 1940 – 1960 காலகட்டத்தில் நடித்த ஒரு மேடைநாடக, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.. தமிழ்த் திரைப்படங்களில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவைக் கூட்டாளியாக பல படங்களில் நடித்தார்.
டி. எஸ். துரைராஜ் தஞ்சாவூரில் ராஜா நாயுடு, நாகலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர்[ மூத்தவர்கள் இருவரும் பெண்கள். தந்தை உள்ளூரில் ஒரு எழுத்தராகப் பணியாற்றியவர். மூத்த சகோதரி மதுரையில் திருமணம் புரிந்ததை அடுத்து இவரும் தனது ஏழாவது வயதில் தாயாருடன் மதுரைக்குக் குடிபெயர்ந்தார்.
மதுரையில் அப்போது சங்கரதாசு சுவாமிகள் தனது நாடகக் கம்பனியை ஆரம்பித்து நடத்தி வந்தார். பள்ளிப் படிப்பில் நாட்டமில்லாமல் இருந்த துரைராஜ் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் கம்பனியில் சேர்ந்தார். இவருக்கு நிறையப் பாடும் சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டன. கோமாளி, மற்றும் பெண்கள் வேடங்களிலும் நடித்து வந்தார்.
துரைராஜின் இரண்டாவது சகோதரிக்கு இலங்கையில் திருமணம் நடந்தது. சகோதரியுடன் இலங்கை சென்ற துரைராஜ் அங்கு சிங்கள நாடகக் கம்பனி ஒன்றில் சேர்ந்து நாடகங்கள் நடித்தார். இரண்டாண்டுகளுக்குப் பின்னர் மதுரை திரும்பி மீண்டும் சங்கரதாசு சுவாமிகளின் கம்பனியில் இணைந்து நடித்தார். சில ஆண்டுகளில் அவர் அக்கம்பனியில் இருந்து விலகி சொந்தமாக திருப்பூரில் “மதுரை ஒரிஜினல் மணிவாசக பால சபா” என்ற நாடகக் கம்பனியைத் தொடங்கினார். கோவை, திருப்பூர், கேரளம் ஆகிய பகுதிகளில் இக்கம்பனிக்கு நல்ல வரவேற்பிருந்தது. ஆனாலும் நான்கு ஆண்டுகளில் கம்பனி பெரும் நட்டத்துக்குள்ளாகி மூடப்பட்டது. பின்னர் அவர் வேலுக்குட்டி நாயர் என்பவரின் மலையாள நாடகக் கம்பனியில் சேர்ந்து நல்ல புகழ் பெற்றார்.[ இவர் பிற்காலத்தில் சொந்தமாகப் பட நிறுவனம் தொடங்கி சில படங்களைத் தயாரித்து இயக்கினார். அதில் குறிப்பிடத்தக்க திரைப்படம் 1958 இல் வெளிவந்த பானை பிடித்தவள் பாக்கியசாலி ஆகும். இதில் சாவித்திரியின் அண்ணனாக நடித்தார். இப்படத்தில் இவர் மணமாகப்போகும் தன் தங்கை சாவித்திரிக்கு அறிவுரை கூறுவதுபோல் பாடுவது போல் அமைந்த புருசன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே தங்கச்சிக் கண்ணே சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே என்ற பாடல் இன்றும் புகழ் பெற்றதாக உள்ளது.


