தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கோமாறன் ஏரி எனப்படும் கோமானேரி குளத்தைக் குடிமராமத்து செய்வதாகக் கூறி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 60.6 லட்சம் ரூபாய் ஒதுக்கினார்கள்.
இதில் வெறும் 20 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே தூர் வாரி, கரைகளை உயர்த்தி விட்டு, தண்ணீர் வீணாக வெளியேறும் மதகுகளில் ஷட்டர்கள் எதுவும் போடாமல், கலிங்குகளுக்குத் தடுப்பு பலகை அமைக்காமல், வேலை முடிந்து விட்டதாக சுமார் 40 லட்சம் ரூபாய்க்குக் கணக்குக் காட்டிவிட்டு மீதமுள்ள 20.6 லட்ச ரூபாயை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அமுக்கிக் கொண்டார்கள்.
மேலும்,கோமானேரி குளத்துப் பாசன விவசாயச் சங்க கோரிக்கை எதையுமே மதிக்காமல் அலட்சியமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடந்து கொண்டார்கள் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தற்போது குளத்தில் உள்ள தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.
உடனடியாக குடிமராமத்துப் பணிக்கு ஒதுக்கிய தொகையை வைத்து மீதமுள்ள பணிகளை முடித்து தண்ணீர் வீணாக வெளியே செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து மதகுகளிலும் ஷட்டர்களை அமைத்துத் தரவேண்டும். ஒதுக்கிய பணத்துக்கான செலவினங்களைக் காட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


