தூத்துக்குடி மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6000 வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6000/- வழங்கும் திட்டத்தின்கீழ் தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது.
சர்வதேச / தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் / இரண்டாமிடம் / மூன்றாமிடம் ஆகிய இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும் (அல்லது) சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று இருக்க வேண்டும்.
ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச / தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம் / இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச / தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மேற்கண்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 2024 ஆகஸ்ட் 31ம் தேதியினை அடிப்படையாகக்கொண்டு 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரருக்கு மாத வருமானம் ரூ.6000/-ஆக இருத்தல் வேண்டும். ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் / மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவோர்கள் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதியில்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் (Veteran / Masters Sports Meet) வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.
நலிந்த நிலையிலுள்ள தகுதியான விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுவதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் வருகின்ற 01.09.2024 முதல் 30.09.2024 பிற்பகல் 6.00 மணி வரை விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.


