‘தீதும்நன்றே’ திரு முத்தாலங்குறிச்சி காமராசு ஐயாவின் இலக்கிய உலகின் ஒரு மைல்கல் என்றால் அது மிகையாகாது. காரணம் மும்பையில் இருந்து திருநெல்வேலி வரையிலான கார் பயணத்தில் பழமையும் புதுமையும் மிகக் கோர்வையாக எந்த ஒரு இடத்திலும் சலிப்பு ஏற்படாதவாறு நகர்த்தி இருப்பது மிகப்பெரிய பலம்.
முத்துக்கிளி என்னும் விறுவிறுப்பான புதினத்தின் தொடர்ச்சியாக தீதும் நன்றே இருக்கிறது.எனினும் இம்மியளவும் விறுவிறுப்பு குறையாமல் நகர்த்தி இருக்கிறார் ஆசிரியர்.
இரண்டே பக்கத்தில் முத்துக் கிளியின் சாரம்சத்தை எழுதி இருப்பதிலும் சரி, ஒவ்வொரு நிகழ்வின் பின்னணியிலும் உள்ள மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்திய இடங்களிலும் சரி, கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் பயணம் செய்து நம்மையும் அவருடன் பயணிக்க செய்திருக்கும் சிறப்பம்சமானது ஆசிரியரைச் சேரும்.
“நம்ம ஊர்ல முத்தாலங்குறிச்சி காமராசுன்னு ஒருத்தர் இருக்காரு. அவர் எழுதின புத்தகத்துல இருக்கும்” என்று கூறும் இடத்தில் சிறு இடைவெளிக்குள் தனது புத்தகத்தை குறிப்பிட்டு இருப்பது ‘அட்ராசக்கை’ என்று நம்மையும் அறியாமல் கைத்தட்டி புன்சிரிப்பினை வரவழைக்கின்றது.
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த கொரோனாவின் தாக்கம் இன்னும் நூறாண்டுகள் கழித்தும் நம் வருங்கால சந்ததியினருக்கு நினைவூட்டும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை விவரிக்கும் இடத்திலும் பழைய கஞ்சியின் சுவையையும் குறிப்பிட்டிருப்பது உண்மையில் நாமும் அந்த நிமிடத்தில் பழைய கஞ்சியை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை போலவே உணர்த்துகின்றது.
தாமிரபரணியின் மீது ஆசிரியருக்கு இருக்கும் பற்றும் பக்தியும், அதன் தூய்மையை பேணிப் பாதுகாக்க அவர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும் இங்கு பல அத்தியாயங்களில் மிளிர்கின்றன.
சுவை மாறாத புரோட்டாக்கள் கூட பழைய நினைவுகளை சுமந்து வருகிறது என்றால், கன்னி பூஜையின் மகத்துவத்தை ரத்தினக்கிளியின் வரலாற்றோடு விளக்கி இருப்பது கண்ணீர் வரவழைக்கிறது. எனினும் இந்த 21ம் நூற்றாண்டில் தெய்வமகிமையை கோயில் கொடை மூலமாகவும் பாரம்பரிய கனியான் ஆட்டத்தின் மூலமாகவும் மண்மனம் மாறாமல் விளக்கி இருப்பது திருநெல்வேலி கிராமப்புற மக்களுக்கு மட்டுமல்ல நமது நாட்டில் கிராமத்தின் பசுமையையும் பாரம்பரியத்தையும் விரும்பும் ஒவ்வொருவருக்கும் தெவிட்டாத செய்திகளை சுவாரசியமாக தருகிறது
சந்திரன் முத்துக்கிளியின் இடையில் இருக்கும் பரஸ்பரமான அன்பு, ரத்தினக்கிளி கொண்டிருந்த கற்பின் உறுதி, ரத்தினத்தின் தந்தை பாசம் என ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்கள் பங்கிற்கு ஆழமான உணர்ச்சிகளை உள்ளடக்கி இருக்கின்றனர்.
மொத்தத்தில் முத்துக்கிளியின் தொடர்ச்சி தீதும் நன்றே என்ற புதினம் தான் என்றாலும், அதற்கே உரிய பாணியில் நாம் கடந்து வந்த கடந்த கால நிகழ்வுகளையும், நிகழ்காலத்தினை இனி வருங்காலத்திற்கு நினைவுகளாகவும் நமக்கு பரிசளித்திருக்கும் ஆசிரியர் இதைப்போன்ற மண்மணம் மாறாத பல காப்பியங்களை படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன் – எழுத்தாளர் சாந்திபிரபு


