கோடைகால சிறப்பு நிதியாக விவசாயிகளுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் – மக்காச்சோளத்தை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி – கோவில்பட்டி தபால் நிலையத்தில் தமிழக முதல்வருக்கு மக்காச்சோள கதிர்களை அனுப்பி நூதன போராட்டம் நடத்தினர்.
மக்காச்சோளத்திற்கு செயற்கையான முறையில் விலை குறைப்பை ஏற்படுத்தும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள ரூபாய் 2,400 விலையில் அடிப்படையில் தமிழக அரசே விவசாயிகளிடம் இருந்து மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய வேண்டும். நெல்லுக்கு கொள்முதல் நிலையம் அமைத்தது போல மக்காச்சோளம் மற்றும் நவதானிய பயிர்களுக்கும் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.மகளிருக்கு கோடை காலநிதியாக ரூபாய் 2000 வழங்கியது போல, விவசாயிகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டும். காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக முதல்வருக்கு மக்காச்சோள கதிர்கள் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கை மனு மற்றும் மக்காச்சோள கதிர்களை தபால் நிலையம் மூலமாக தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் வழக்கறிஞர் கருப்பசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் கனி, செயலாளர் பொன்ராஜ், மாவட்ட மகளிரணி தலைவி அமுதா, வட்டாரத் தலைவர்கள் பூல்பாண்டி, முனியசாமி, மாவட்ட பொருளாளர் செண்பகராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் அய்யாத்துரை, விக்னேஷ் ராஜா, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் வைரம், திருமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிமாறன், சரவணன், செந்தூர்பாண்டியன், வட்டார துணைத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கராஜ், நகர துணைத் தலைவர் தங்கப்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


