கியானி ஜெயில் சிங் (மே 5, 1916 – டிசம்பர் 25, 1994) 1982 முதல் 1987 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார். இந்தியாவின் குடியரசுத் தலைவரான முதல் சீக்கியரும் இவரே ஆவார். இவர் ஒரு விடுதலைப் போராட்ட வீரராகவும், காங்கிரஸ் கட்சித் தலைமைப் பதவிகளிலும், முதலமைச்சர், நடுவண் அமைச்சர் எனப் பல பதவிகளில் இருந்து செயல்பட்டவர்.
தந்தையார் ஒரு தச்சுத் தொழிலாளி. செயில் சிங் தம் தாயை தம் இளம் அகவையிலேயே இழந்தார்.சின்னம்மா கவனிப்பில் வளர்ந்தார். சீக்கிய சமயத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட குடும்பத்தில் பிறந்த காரணத்தால் குரு கிரந்த சாகிப் என்னும் நூலைக் கற்றுத் தேர்ந்தார். சீக்கிய மதத்தின் கோட்பாடுகளையும் வரலாற்றையும் கற்றார். சமயக் கல்லூரியில் சேர்ந்து பணி செய்தமையால் செயில் சிங் சொற்பொழிவு ஆற்றுவதில் திறமை பெற்றார். கியானி என்னும் சொல் சமயக் கோட்பாட்டில் தேர்ந்தவர் என்று பொருள்.
1949 ஆம் ஆண்டில் பாட்டியாலாவும் கிழக்குப் பாக்கிசுத்தான் மானிலங்களும் இணைந்த ஒரு பகுதியான ‘பெப்சு’ வில் கட்சி சாரா அரசு அமைக்கப் பட்டது. அவ்வரசில் செயில் சிங் வருவாய்த் துறை அமைச்சர் ஆனார்.
1951ஆம் ஆண்டில் தேர்தலில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதில் வேளாண் அமைச்சர் ஆனார்.
1956 முதல் 1962 வரை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்தார்.
1972 இல் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
1980 இல் நிகழ்ந்த இந்தியப் பொதுத் தேர்தலில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்துறை அமைச்சர் ஆனார்.
1982 இல் இந்தியக் குடியரசுத் தலைவராக ஒருமனமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு 5 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.
கியானி செயில் சிங் நடுவணரசின் உள்துறை அமைச்சராக இருந்தபோதும் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவராகச் செயல்பட்டார். சீக்கிய மதப் புனிதக் கோயிலான பொற்கோயிலில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளின் வன் செயல்களை ஒடுக்கும் நோக்கத்தில் பொற் கோயிலுக்குள் இந்திய இராணுவம் நுழைந்தது. சில மணி நேரத்தில் அங்கு இருந்த தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள். இதனால் பொற்கோவிலின் புனிதம் கெட்டுவிட்டது என்று சீக்கிய மதத்தினர் கண்டித்தனர்.கியானி செயில் சிங்கை குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகச் சொன்னார்கள். ஆனால் செயில் சிங் பதவி விலகவில்லை. ஆனால் பிற் காலத்தில் அந்நிகழ்வுகளுக்கு சீக்கியர்களிடம் மன்னிப்புக் கோரினார். தம் சீக்கியப் பாதுகாவலர்களால் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப் பட்டபோது தில்லியில் பெரிய வன்முறை சீக்கியர்கள் மீது நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் அவ்வன்முறையில் மாண்டார்கள். இந்திரா காந்தி மறைவுக்குப் பின் இராசீவ் காந்தி பிரதமர் பதவி ஏற்றார். ஆனால் கியானி செயில் சிங் பிரதமர் இராசீவ் காந்தியுடன் இணக்கமாக இல்லை. சில நடவடிக்கைகளில் கருத்து வேறுபட்டார்..
1994 ஆம் ஆண்டில் புனிதப் பயணம் செய்யும்போது சாலையில் விபத்து ஏற்பட்டு காயம் அடைந்து மருத்துவமனையில் இறந்தார்.


