
ங்ககடலில் உருவாக உள்ள குலாப் புயல் காரணமாகத் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு குலாப் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த குலாப் பெயரைப் பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளது. வங்கக்கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணிநேரத்தில் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் நாளை மாலை தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவில் உள்ள கலிங்கப்பட்டினத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால் தமிழகத்தில் உள்ள முக்கிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன்படி சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, காரைக்கால், புதுச்சேரி, தூத்துக்குடி, பாம்பன் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் குமரிக் கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இன்று தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.