ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்தில் சர்வதேச காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டி, திறம்படச் செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
சர்வதேச அளவில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாடு வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது இந்தச் சாதனையினைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது இந்த வெற்றி, விளையாட்டுத் துறையில் ஈடுபடும் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்குப் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும். அவர் மேலும் பல சாதனைகளைப் படைத்து இந்தியத் திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். 2707202610


