தூத்துக்குடியில் தேர்தல் தினமான விடுமுறை நாளில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கத் தவறியதாகத் தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடந்த 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு, டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்தன.
அரசால் தடை செய்யப்பட்ட தேர்தல் தினங்களில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கத் தவறியதாகத் தென்பாகம் காவல் ஆய்வாளர் திருமுருகன் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதனுக்கு ரகசியத் தகவல்கள் மற்றும் புகார்கள் சென்றன. இது குறித்து முதற்கட்ட விசாரணை நடத்திய எஸ்.பி. மதன், ஆய்வாளர் திருமுருகனை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்த சூழலில், காவல் ஆய்வாளர் ஒருவர் பணியில் மெத்தனமாக இருந்ததாகக் கூறி மாற்றப்பட்ட சம்பவம் தூத்துக்குடி காவல்துறையினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


