தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று, சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
தூத்துக்குடியின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காலை, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு 8 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளினர்.
சுவாமி சங்கர ராமேஸ்வர வலிமையின் அடையாளமான பூத வாகனத்தில் வீதி உலா வந்தார். அம்பாள் பாகம்பிரியாள் கம்பீரமான சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு அருள்பாலித்தார். வழக்கமான உற்சாகத்துடன் மேள தாளங்கள் முழங்க, விநாயகர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுடன் சுவாமியும் அம்பாளும் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தனர்.
தேர்தல் பரபரப்புகளுக்கு இடையே, பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் இணைந்து விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.


