தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டன. அங்குள்ள பாதுகாப்பு அறைகள் மற்றும் இயந்திரங்களைப் பெறும் இடங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் விஷு மகாஜன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 23) நடைபெற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்குக் கொண்டு வரப்பட்டன.
தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி, வாக்கு எண்ணும் மையமாகச் செயல்படுகிறது. இங்கு அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளுக்காகத் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகள் பெறும் இடம் மற்றும் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் ‘பாதுகாப்பு அறை’ (Strong Room) ஆகியவற்றை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் இன்று (24.4.26) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, பாதுகாப்பு அறைகளின் பாதுகாப்புத் தன்மை, கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு மற்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


