தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நாலுமாவடியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து பெங்களூக்கு சென்று செல்போன் கடைக்கு தேவையான உதிரி பாகங்கள் வாங்கி விட்டு இன்று தூத்துக்குடி வழியாக வந்து கொண்டிருந்தார்.
அப்போது முக்காணி பகுதியில் சாலையின் ஓரம் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் மணிகண்டன் ஓட்டி வந்த கார் புகுந்தது.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த நட்டார் சாந்தி, பார்வதி, அமராவதி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் சண்முகத்தாய் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த ஆத்தூர் போலீசார் இறந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கார் ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்து பார்வையிட்ட திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் மற்றும் கோட்டாட்சியர் உதவியாளர் கோபாலகிருஷ்ணன் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் உடனடியாக இந்த இடத்தில் 4 வளைவுகளுடன் கூடிய தடுப்பு வேலி அமைக்கப்படும் என்றும், இரவுக்குள் வேகத்தடை அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
அதிகாலை நேரத்தில் தெருவோரம் குழாயில் தண்ணீர் பிடிக்க வந்த மூன்று பெண்கள் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


