தூத்துக்குடி நகரின் முக்கிய போக்குவரத்துப் பகுதியான 2-வது ரயில்வே கேட், அவசர கால பராமரிப்புப் பணிகளுக்காக இன்று இரவு தற்காலிகமாக மூடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் தூத்துக்குடி முதுநிலை பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரயில்வே கேட் எண் 486 (ECR ரோடு மற்றும் WGC ரோடு இணைப்புப் பகுதி) இன்று (22.04.2026) இரவு 10:00 மணி முதல் நாளை (23.04.2026) காலை 06:00 மணி வரை ரயில்வே தண்டவாளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர கால பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட உள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ரயில் போக்குவரத்தைச் சீரமைக்கும் நோக்கில் இந்த பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாளை காலை 6 மணிக்கு பணிகள் நிறைவடைந்து போக்குவரத்து வழக்கம்போல் தொடங்கும். எனவே, இரவு நேரப் பயணத்தை மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


