
பன்னெடுங் காலமாகமாக திரையரங்குகள் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த காலத்தில் படம் பார்க்கச் செல்லும் போது இடைவேளையில் ஒரு விளம்பரம் – ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை எல்லா திரையரங்குகளிலும் வரும்.
‘தோரணமலையானை தரிசிக்க வாருங்கள். கடையம் தென்காசி சாலையில் உள்ளது.’
நானும் பக்கத்துல தானே இருக்கு போய்ப் பாத்துக்கிடலாம் அப்படின்னு நினைத்து நினைத்து வயது 60 ஐ தாண்டி விட்டது.
சில நாட்களுக்கு முன்பாக ஒரு அலைபேசி. நம்ம முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களிடமிருந்து. ‘தலைவரே ஆண்டுதோறும் நம்ம கடையம் பக்கத்துல உள்ள தோரணமலை முருகன் கோயிலில் அறங்காவலர் சார்பாக சிறந்த சமூகப் பணிகளுக்கான விருதுகள் வழங்கி வருகிறார்கள். இந்த ஆண்டு உங்களுடைய எழுத்துப் பணிக்காகவும் கலை பதிப்பகத்தின் மூலம் எழுத்தாளர்களை உருவாக்குவதற்காகவும் நான் உங்களை பரிந்துரைத்திருக்கிறேன்’ எனும் தகவலைச் சொன்னார். ‘நீங்க சொல்லிட்டீங்கல்ல வந்துடறேன்’ எனச் சொல்லி இருந்தேன்.
சித்திரை ஒன்றாம் நாள் இந்த நிகழ்ச்சி போல. நிகழ்ச்சியின் நெருக்கத்தில் தான் விருதுகளின் எண்ணிக்கை சுமார் 20. அதில் நம்மோடு நட்புணர்வில் இருக்கக்கூடிய திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவை அமைப்பாளர் ஜெயபாலன் அவர்களும் உண்டு, மீனாட்சிபுரம் கிளை நூலகத்தின் நூலகர் அகிலன் முத்துக்குமார் அவர்களும் உண்டு, சென்னை வாழ் நெல்லை புலனக் குழுவின் நிர்வாகி பத்திரிக்கையாளர் சங்கர் மணி அவர்களும் உண்டு, நம்ம மேலப்பாளையம் இசை மருத்துவர் ஐயா பிரேமச்சந்திரன் அவர்களும் உண்டு எனும் தகவல்கள் கிடைத்தது. எப்படியும் கார்ல தான் போகப்போறோம் எனும் நிலையில் நமது வேண்டுகோளுக்கிணங்க விருதாளர் ஜெயபாலன், கவிஞர் பிரபு, கவிஞர் சுப்பையா, நண்பர் புன்னைச்செழியன் நண்பர் மருத்துவக் கல்லூரி மாணிக்கவாசகம் என நான் உட்பட ஆறு பேர் பயணம். கோவிலில் முத்தாலங்குறிச்சியார் அன்போடு வரவேற்றார். (நூலகர் அகிலன் துணைவியாரோடு இருசக்கர வாகனத்தில் வருகை தந்திருந்தார்.) தோரணமலையான் விருது பெறப் போகிறவர்களைப் பற்றி பெரிய விளம்பரப்பதாகையும் அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. (அதிலிருந்து தான் எங்களோடு மூன்று முடிச்சு தொலைக்காட்சி தொடர் நடிகர்- நடிகைகள், இயக்குனர், தயாரிப்பாளர் எல்லாம் விருது பெறப்போவது தெரிந்தது.) இப்போதைய அறங்காவலர் செண்பகராமன் மற்றும் அவர்களது தந்தை ஆதிநாராயணன் ஆகியோரின் முன்னெடுப்பில் பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அடிவாரத்தில் ஒரு பிள்ளையார் கோயிலும் கூடவே நூலகம் ஒன்றும். இன்னும் கூடுதலாக கல்விப் பயிலகம் ஒன்றும் கூட அமைக்கப்பட்டு இருந்தது. தோரணமலை முருகனைப் பற்றிய பத்திரிக்கை செய்திகள் அனைத்தும் பெரிய அளவில் பதாகைகளாக வைக்கப்பட்டிருந்தது சிறப்பு.
சிறப்பு அபிஷேக ஆராதனைக்குப் பின்னரான மூலவரின் எழுந்தருளலிற்குப் பிறகு மேடையில் கோவில் நிர்வாகிகளும் விவசாயிகளும் சூழ்ந்து இருக்க ஒரு வித்தியாசமான சூழலில் எங்களுக்கெல்லாம் விருதுகளை வழங்கினார்கள். தொலைக்காட்சி குழுவினருக்கு இரண்டாம் பாகமாக நடைபெற்றது. முத்தாலங்குறிச்சியார் ஒவ்வொருவரைப் பற்றியும் அவர்களின் சிறப்புகள் பற்றியும் நன்றாகவே எடுத்துரைத்திருந்தார். நல்ல கூட்டமும் கூட. சில புகைப்படங்களுக்கு பின்னர் மலை மேல் முருகனைப் பார்க்க எத்தனை படி ஏறனும் என விசாரித்த போது சுமார் 1200 என்றார்கள். ஆத்தாடியோ… கால்கள் ஒத்துழைக்குமா? இதயம் ஒத்துழைக்குமா? எனும் கேள்வி முன் வந்து நிழலாடியது. என்றாலும் ‘வாங்க கொஞ்சம் படிகளாவது ஏறி இறங்குவோம்’ எனச் சொல்லி நான்தான் அதிகபட்சமாக 150 படிகளில் நின்றேன். புகைப்படங்கள் எடுத்த பிறகு இறங்கியாச்சு. இறங்கும்போது ஒரு குரல் விசாரித்தது…
‘என்ன சார் நல்லா இருக்கீங்களா?’
மாணவி என்று புரிந்தது. யார் என்று தான் புரியவில்லை. கேட்டுவிட்டேன்.
‘நீங்க அன்னைக்கு எங்க காலேஜுக்கு வந்து தமிழ் பற்றி அழகா பேசினீங்கள்ல… நல்லமணி யாதவா கல்லூரி சார்’
ஓ சமீபத்திய அன்பு. நன்றி தெரிவித்து புகைப்படம் எடுத்துக்கொண்டாயிற்று. (பேர ஞாபகமா கேட்டேன் ஆனா மறந்துடுச்சு இப்போ ????)
உடன் வந்த நண்பர்கள் பழைய குற்றாலம் போய் குளித்துவிட்டு ஊருக்கு போகலாம் எனச் சொன்ன போது மறுக்க முடியவில்லை. (ஆனால் நமக்கு வெளிக்குளியல் எல்லாம் ஒவ்வாமையாகி நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது.) அதற்காக வாகனத்தை எடுத்து ஆக்சிலேட்டரில் கால் வைத்த போது தான் ‘என்ன கால் நடுங்குகிறது’ என யோசித்தால் மற்றொரு கால் ‘150 படிகள் தம்பி’ என பதில் சொன்னது. 150கே இப்படின்னா 1200 க்கு என்னவாகி இருக்கும் யோசிங்க…
அதனால இப்ப என்ன சொல்ல வர்றேன்னா உடம்புல தெம்பு இருக்கும்போதே மனசுல ஆர்வத்தைக் கொண்டு வந்து வச்சுக்கிட்டு தோரண மலையானை படிகள் ஏறிப் போய் தரிசனம் செய்து விடுங்கள். அப்புறம் என்ன மாதிரி குத்து மதிப்பா உச்சி மலையை பார்த்து கும்பிடு போட வேண்டியது தான் வரும்!…
அடுத்த வாரம் கிளம்பிடுங்க விடுமுறை காலத்துக்குப் பொருத்தமாக இருக்கும்!