
பகலும், இரவும் கலந்த பூமி.
மறுப்பும்…. வெறுப்பும் நிறைந்த மானுட சந்தை.
யானையை பரிசாய் கொடுத்தாலும், பக்கத்தில் இருக்கும் பூனையையும் தரவில்லையே என்று குற்றம் சாட்டத் தெரிந்த மனிதர்கள்.
இந்த பூமி எங்கும் ஏராளமான மலர்கள் தினத்துக்கும் பூத்து குலுங்கத்தான் செய்கிறது.
வாசம் தரும் மலர்கள் அவற்றில் ஏராளம்.
ஆனாலும், 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்களே சங்க இலக்கியம் தொட்டு, இன்று வரை சிறப்பாக சொல்லப்படுகிறது.
அதுபோல்தான் மனிதர்களில் சிலர்.
ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன், நெல்லை நகரில்
“வெண்பா வேந்தர்” என்றால், தெரியாத மனிதர்கள் இருக்க முடியாது.
கவிஞர்கள் நிறையவே அடையாளம் உண்டு.
பாவலர் என்ற சொல்லுக்கு சிலரே அடையாளம். அப்படிப்பட்டவர்களின் ஒருவர் தான் திரு தங்கமணி நாடார் அவர்கள். (சாதி பெயரை வேண்டுமென்று இங்கு பயன்படுத்தவில்லை. திருவாளர் தங்கமணி என்று சொன்னார் அடையாளம் காண்பது நிறையவே கடினம்.
ஆனால், வெண்பா வேந்தர் தங்கமணி நாடார் என்றால், எல்லா சமூகத்தை சார்ந்த குழந்தைகளும் கைத்தட்டி குதுகுல மாகி விடுவர்.
தனக்கு பேசுகின்ற வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம், அங்கே நிற்கும் குழந்தைகளிடம் ஏதேனும் ஒரு கேள்வியை கேட்டு, அந்த குழந்தை சரியான பதிலை சொன்னால் ரூபாய் 10 பரிசாக வழங்கும் பழக்கத்தை கொண்டவர்.
நெல்லை நகருக்குள் அவரை தெரியாத மனிதர் களே கிடையாது.
அந்த நேரத்தில், அவருக்கு வயது 60.
எனக்கு வயது 45.
நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.
அவர், தனக்கு தெரிந்த பல்வேறு உயர்நிலை அதிகாரிகளையும், நண்பர்களையும், கவிஞர்களையும் எனக்கு அறிமுகம் செய்து தந்திருக்கிறார்கள்.
அவரை விட அறிவு ஆற்றலின் நான் குறைந்தவனாக இருந்த போதும், தன் நண்பர்களை மத்தியில் என்னை முதன்மைப் படுத்தி சிறப்பாக சொல்லுவார்.
அப்படி, அவரால் எனக்கு அறிமுகம் ஆனவர்தான், இன்றைய பிரபல தொல்லியல் ஆய்வாளர், கவிஞர், எழுத்தாளர், படைப்பாளி என பன்முக திறமை கொண்ட
முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள்.
நான், நெல்லை நகரில் இயங்கி வரும் முதல் நிலை நூலகத்தின் வாசகர் வட்ட தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்கள் அது.
மாதாமாதம், வாசகர் வட்ட கூட்டத்திற்கு தகுந்த திறமையாளர்களை அழைத்து வந்து வாசகர்களின் மத்தியில் பேச வைத்து, அவர்களின் வாயிலாக நல்ல பல செய்திகளை கொண்டு வருவது எனது வாடிக்கையான செயலாக இருந்தது.
சமீபத்தில் இயற்கையை எயிதிய எழுத்தாளர் நாறும்பூ நாதன் ஐயா போன்ற பலருடன் நெருங்கும் வாய்ப்பு அப்போது எனக்கு கிடைத்தது.
அது போல் தான், ஒரு மாதாந்திர கூட்டத்திற்கு யாரை அழைப்பது என்று விவாதிக்கப்படும் நேரத்தில் திரு. தங்கமணி நாடார் அய்யா அவர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களை அழைப்போமா என்று கேட்டார்.
அன்றைய நாட்களில், தமிழ் முரசு நாளிதழில் திரு காமராசு அவர்கள் தாமிரபரணி நதி குறித்து எழுதிக் கொண்டிருந்தார்.
எனது படைப்புகளும் தமிழ் முரசு நாளிதழில் வந்து கொண்டிருந்தது கவிதைகளாக.
அதனால், காமராசு அவர்களை பற்றி நேரில் தெரியா விட்டாலும், தமிழ் முரசு வாயிலாக அறிந்திருப்பதனால், சரி அழைக்கலாம். ஆனால் அவரது தொலைபேசி எண் என்னிடம் இல்லையே என்று சொன்னேன்.
திரு தங்கமணி ஐயா அவர்கள், கவலைய விடுங்க அவரை வர வைப்பது என் பொறுப்பு என்று உத்தரவாதம் தந்தார்கள். சொன்னது போல் நிகழ்ச்சி துவங்கும் நேரத்தில் சரியாக திரு. முத்தாலங் குறிச்சி காமராசு அவர்கள்
நூலகத்திற்கு வந்துவிட்டார்.
அன்று துவங்கிய எங்கள் நட்பு ,இன்று வரை, பசுமை பூத்து, படர்ந்து, விரிந்து செழித்து வாழ்கிறது.
எளிமை, இனிமை என்ற சொல்லுக்கு முதல் அடையாளம் அன்பர் காமராசு அவர்கள்தான்.
எங்கள் பழக்கம் தொடங்கிய காலத்தில், எளிமையான எழுத்தாளராக இருந்த காமராசு அவர்கள், இன்று உலகம் அறிந்த தொல்லியல் ஆய்வாளர். வரலாறு குறித்து எழுதும் அற்புதமான எழுத்தாளர்.
இன்றைக்கு, ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு தமிழர்களின் நாகரிகத்தின் உச்சமாகவும், இரும்பு நாகரீகத்தில் உலகத்தில் முதல் வழிகாட்டியாகவும் இருக்கிறது என்றால், ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வை நீதிமன்றங்களின் வழியாக தொடங்க வைத்த
பெருமைக்குரியவர்.
தென்னகத்தின் வற்றாத, உயிரோட்டம் உள்ள நதியான, பொருநை நதியின் புனிதம் காக்கப்பட தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பவர்.
தமிழ்நாடு அரசு வழங்கியிருக்கும்,” தமிழ்ச் செம்மல்”விருது தொடங்கி பல்வேறு இலக்கிய அமைப்புகள், சமூக ஊடகங்கள் என உலகம் தழுவிய விருதுகளை தொடர்ந்து பெற்று வருபவர்.
எத்தனை சிறப்புகளும், புகழும் தனக்கிருந்தாலும், எந்தவிதமான கர்வமும், படபடப்போமோ இல்லாமல், நாங்கள் முதன் முதலாக சந்தித்த போது எப்படி இருந்தாரோ அப்படித்தான் என்றும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
(இன்னும் எழுதுவேன் நாளை)