
மது தன்டவதே 21ஜனவரி 1924–12 நவம்பர் 2005 என்பவர் இந்திய அரசியல்வாதி, சோசலிசக் கருத்தாளர், நடுவணரசு அமைச்சர் ஆவார். 1971 முதல் 1990 வரை தொடர்ந்து 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.தொடக்கக் காலத்தில் இயற்பியல் பேராசிரியராக இருந்தும் மும்பையில் சித்தார்த்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரயில் துணை முதல்வராகவும் பணியாற்றினார்.மகாராட்டிர மாநிலம் அமைவதற்குப் போராடிய சம்யுக்தா மகாராட்டிர இயக்கத்தில் ஈடுபட்டார். பிரசா சோசலிசக் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் அனைத்திந்திய இணைச் செயலாளராகவும் ஆனார். நில மீட்பு இயக்கத்தில் இணைந்து செயலாற்றினார். 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டார்.
1970-71 ஆண்டுகளில் மகாராட்டிர சட்ட மேலவையில் உறுப்பினர் ஆனார். நெருக்கடிக் காலத்தில் 1975 இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெங்களூரு மற்றும் ஏர்வாடா சிறையில் இருந்தார். மது தன்டவதே கொங்கன் ரெயில்வே உருவாகப் பாடுபட்டார்.மொரார்சி தேசாய் தலைமையில் அமைச்சரவையில் தொடர் வண்டித் துறை அமைச்சர் ஆனார். அப்போது தொடர் வண்டி இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் மரத்தினால் ஆன படுக்கையை நீக்கி போம் மெத்தையினால் ஆன படுக்கை வசதியை இவர் ஏற்படுத்தினார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது இவர் நிதி அமைச்சர் ஆனார். 1990 இல் திட்டக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றார். இவர் இறக்கும் வரை அனைத்திந்திய வாணாள் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கத் தலைவராக 24 ஆண்டுகள் இருந்தார்.