தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர் – மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உரிய வழிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் எம். வெங்கடேஸ்வராபுரதத்தைச் சேர்ந்த ஒருவர் புஞ்சை நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறார் மழை வருவதையறிந்து அங்குள்ள பனை மரத்தடியில் ஒதுங்கி நின்றிருக்கிறார், அந்த நேரத்தில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார், அதே போன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கீழப்பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டிற்கு மண் ரோட்டில் நடந்து செல்லும்போது மழை பெய்த காரணத்தினால் வேப்ப மரத்தடியில் ஒதுங்கி நின்றிருக்கிறார், அவரையும் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்தில் இறந்துள்ளார். மேலும் இன்று தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வர்த்தகரெட்டிபட்டியைச் சேர்ந்த ஒருவர் 2 ஏக்கர் நிலத்திற்கு வேலி போட்டுக் கொண்டிருக்கும்போது மின்னல் தாக்கி இறந்துள்ளார், அதே போன்று மாசார்பட்டியில் ஒருவரும் மின்னில் தாக்கி இறந்துள்ளார். நேற்று 2 பேரும், இன்று 2 பேரும் இறந்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறுகையில் நேற்றும், இன்றும் 4 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்திருப்பது மிகவும் மன வேதனையளிப்பதாக உள்ளது. ஆகவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மழை நேரங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரங்களில் மரங்களின் அடியில் கண்டிப்பாக நிற்கக் கூடாது, அதே போன்று உயரமான மின் கோபுரங்கள், தொலைப் பேசிக் கோபுரங்கள் அடியில் நிற்கக்கூடாது. கைப்பேசி வைத்திருந்தால் அவற்றை ஸ்விட்ச் ஆஃப் செய்து கொள்வது மிகவும் நல்லது. மின்சாரம் கடத்தக்கூடிய உலோகப் பொருட்களைத் தலையில் வைத்துக் கொண்டு நடப்பது, நிற்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உயரமான கட்டிடங்களின் மேற்பகுதி மற்றும் உயரமான இடங்களில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். ஆறு, குளம் மற்றும் நீர் நிலைகளிலிருந்தால் உடனே அங்கிருந்து வெளியேற வேண்டும். இடி, மின்னல் நேரத்தில் கான்கிரீட் கூரைகள், வீடுகள், பள்ளி வளாகங்கள், அலுவலக வளாகங்கள் ஒதுங்குவதற்குப் பாதுகாப்பான இடங்களாகும். மேலும் முழுமையாக மூடப்பட்ட பேருந்து மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதற்கடுத்த பாதுகாப்பான இடமாகும். மின் சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், வீட்டினுள் இருக்கும்போது கதவு, ஜன்னல்களை மூடி வைத்துக் கொள்ளவேண்டும். இடி, மின்னல் நேரங்களில் அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


