தூத்துக்குடியில் உடல் நலக்குறைவால் காலமான முதல் நிலை காவலர் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வழங்கி ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முதல் நிலை காவலர் நட்டார்செல்வம் என்பவர் கடந்த 04.01.2024 அன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் தங்களால் இயன்ற நிதியுதவி செய்ய வேண்டும் என்ற கருணையுள்ளத்தோடு, அவருடன் 2011ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதுமுள்ள சக காவலர்கள் ஒன்று திரண்டு காக்கி உதவும் கரங்கள் – 2011 சார்பாக ரூபாய் 25,61,250/- பணம் நன்கொடையாக பெற்று, அவற்றை காப்பீட்டு பத்திரங்கள், வங்கி நிரந்தர வைப்புத் தொகைகள் மற்றும் ரொக்கமாகவும் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் 2011ம் ஆண்டு காவலர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஒற்றுமையுணர்வுடனும், கருணையுள்ளத்தோடும் மேற்படி நிதியை வழங்கிய 2011ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு, இந்த பெரிய நிதியுதவி அளித்தமைக்காக தெய்வத் நட்டார்செல்வம் அவர்களது குடும்பத்தார் சார்பாகவும், மாவட்ட காவல்துறை சார்பாகவும் பாராட்டுக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்த நிதியை திரட்டிய 2011ம் ஆண்டு காவலர்கள் காக்கி உதவும் கரங்கள் – 2011 குழுவைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.


