நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆகாஷ் தேசிய திறனாய்வு தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் இடத்தையும், தமிழக அளவில் 5ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நடப்பு கல்வியாண்டிற்கான தேசிய திறனாய்வுத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது. அதில், மர்காஷிஸ் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிற ஆழ்வார்திருநகரி மாணவர் ஆகாஷ் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடமும், தமிழக அளவில் ஐந்தாம் இடமும் பெற்றுள்ளார். மேலும், எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆல்பி ஜோன்ஸ், காட்சன் ஜீடா, பிரதீப்ராஜ், சித்தார்த், கார்த்திக் சிவராஜா ஆகியோர் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் 1000 ருபாய் 12ம் வகுப்பு படித்து முடிக்கும் வரை வழங்கப்படுகிறது. தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளிக்க ஆசிரியர்களையும் பாராட்டிப் பேசினார்.
உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், ஆசிரியைகள் அமுதா வில்சி தங்கம், சோபியா பொன்ஸ் ஆகியோர் மாணவர்களைப் பாராட்டினர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் மாணவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர் தனபால், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


