தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள், மதுபாட்டில்கள், கஞ்சா விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின் பேரில் அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று (16.01.2022) மேற்கொண்ட ரோந்துப் பணியில் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலைப் பொருட்கள் மதுபாட்டில்கள் விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 19 வழக்குகளும், ஊரக உட்கோட்டத்தில் 7 வழக்குகளும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 3 வழக்குகளும், மணியாச்சி உட்கோட்டத்தில் 2 வழக்குகளும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 12 வழக்குகளும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 2 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 3 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையங்களில் 5 வழக்குகளும் ஆக மொத்தம் 58 வழக்குகள் பதிவு செய்து 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 48 பேரும், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 3 பேரும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரும், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 27 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 5741 புகையிலைப் பாக்கெட்டுகள், 823 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.35,480 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


