காமநாயக்கன்பட்டி அருகே மாட்டு தொழுவத்தில் கன்று குட்டியை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
காமநாயக்கன்பட்டி அருகே உள்ள முடுக்கலாங்குளம் கிழக்கு தெருவில் வசிப்பவர் பொன்மாடன் (53). விவசாயி. இவர் தனது வீடு அருகே மாட்டு தொழுவம் அமைத்து ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நள்ளிரவில் மர்மநபர்கள் தொழுவத்தில் கட்டி போட்டு இருந்த கன்று குட்டியை திருடி கொண்டு ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில், கொப்பம்பட்டி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாலையில் குருவிநத்தம் – காமநாயக்கன்பட்டி சாலையில் அவரது தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக மினி லோடு ஆட்டோவை நிறுத்துவதற்கு போலீசார் சைகை காட்டினர். அப்போது ஆட்டோவில் இருந்த டிரைவர் உள்பட 4 பேர் தப்பி ஓடினர்.
போலீசார் விரட்டி சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்ற 3 பேரும் தப்பியோடிவிட்டனர். பிடிபட்ட நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அவர் கே.ஆலங்குளம் தெற்கு தெரு கணேசன் மகன் மாரிசெல்வம் (21) என்பதும், இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பொன்மாடன் வீட்டில் கன்று குட்டியை திருடி சென்றதும் தெரியவந்தது.
அவர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் கன்று குட்டியை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிசெல்வத்தை கைது செய்து மினி ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய அவரது கூட்டாளிகள் 3 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.


