தூத்துக்குடி அருகே பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் எம்.ஆர்யா ஸ்கிப்பிங் விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளார்.
போதை போன்ற தவறான வழிகளில் இளைஞர்கள் போகக்கூடாது, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ஸ்பிக்நகர் கீதா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் உலக இளைஞர்கள் தின விழா மற்றும் காமராஜரின் 122-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.அந்தோணி அதிஷ்டராஜ் தலைமை வகித்தார்.
இவ்விழாவின் போது, பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் எம்.ஆர்யா, தனது முதுகில் 30.3 கிலோ எடையுள்ள பாரத்தை சுமந்து கொண்டு தொடர்ச்சியாக 3 நிமிடத்திற்கு ஸ்கிப்பிங் விளையாட்டில் ஈடுபட்டு, 366 சுற்றுகளை பெற்று உலக சாதனை படைத்தார். இதன் நடுவர்களாக நோபெல் உலக சாதனை நிறுவனத்தின் மாநில தலைமை செயல் அலுவலர் டாக்டர் அரவிந்த் லட்சுமி நாராயணன், தேசிய அமைப்பாளர் எம்.கே.பரத் குமார் ஆகியோர் இருந்தனர்.
இதனை தொடர்ந்து, ஆர்யா உலக சாதனை பெற்றுள்ளதாக, நடுவர்கள் அறிவித்ததுடன், அவருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இதனையடுத்து, ஆர்யாவுக்கு அவரது பெற்றோர் முத்துசாமி, ரேவதி, ஸ்கிப்பிங் பயிற்சியாளர் ஐயப்பன் மற்றும் மாணவ, மாணவிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.


