சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி. வெளிநாடுகளில் உள்ள ஆதிச்சநல்லூர் பொருள்களை மீட்டு ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். அதன் முதல் கட்டமாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் 80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர சங்க கால வாழ்விடப்பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வாரம் 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதே குழியில் 9 அம்புகள், 1 வாள், 1 ஈட்டி, 1 சூலம், தொங்கவிட்டான் உள்பட 20 பொருட்கள் கிடைத்தது.

அதே போல் சிவகளையில் மாநில அரசு சார்பில் நடந்து வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து ஒரு வார காலத்தில் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை அகழாய்வு பணியில் தங்கம் கிடைத்ததால் ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கவனம் தென் தமிழகம் நோக்கி திரும்பியுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் ஆதிச்சநல்லூர், சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் வருகை தந்தார். அவர் முதலில் சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டார். அவருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வருகை தந்தார். முதுமுக்கள் தாழிகள், ஆய்வில் கிடைத்த தங்கப்பொருட்களை பார்வையிட்டார். தொடர்ந்து அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் தலைமையிலான ஆய்வாளர்கள் அவருக்கு விளக்கமளித்தனர்.
அதனை தொடர்ந்து ஆதிச்சநல்லூர் வருகை தந்த கனிமொழிக்கு ஆய்வாளர்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஆய்வுக்குழிகளையும், ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், தங்க நெற்றிப்பட்டத்தையும் பார்வையிட்டார். அதன் பின் அங்கு தங்கம் கிடைத்த குழிக்குள் ஏணி வழியாக கனிமொழி எம்.பி. இறங்கி அங்கே கிடைத்த வெண்கல பொருள்கள் வாள் உள்பட பல பொருள்களை பார்வையிட்டார். வெண்கல பொருள்கள் குறித்து ஆய்வாளர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். மத்தியதொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், தொல்லியல் ஆய்வாளர்கள் அறவாழி, யத்தீஸ்குமார், முத்துகுமார் உள்பட ஆய்வாளர்கள் விளக்கம் அளித்தனர்.
பின்னர் அகழாய்வு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனிமொழி எம்பி பேசுகையில்,

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன நெற்றிப் பட்டம் மற்றும் காதணி கண்டுபிடிக்கப்பட்டது முக்கியமான கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.
குறிப்பாக அகழாய்வு பணியில் ஈட்டி, வாள் இரும்புப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் நடைபெற்றால் உலக அளவில் ஆதிச்சநல்லூர் புகழ் போற்றப்படும். மேலும் இங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணியின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 145 வருடங்களுக்கு முன்பு ஜெர்மன் பெர்லின் நகர் உள்பட வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ஆதிச்சநல்லூர் பொருட்களை கண்டுபிடித்து அதை கொண்டு வந்து ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கவேண்டும். இதற்கான நடவடிக்கையை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டி தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் அதற்கான கடிதம் அளிப்பேன். தொடர்ந்து அந்த பொருள்களை மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், வட்டாட்சியர் ராதகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியர் , எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞசாயத்து தலைவர் சங்கர் கணேஷ், ஊராட்சி செயலர் வி. வேலாயுதம், ஆ. சிவா , சமூக ஆர்வலர்கள் மணிகண்டன் வை. முத்துமாலை உள்பட பலர் கலந்துகொண்டார்.


