கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் மாணவர்கள் இளவட்டக்கல் தூக்கி அசத்தினர்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் மாட்டு வண்டியில் சென்று இளவட்டக்கல் தூக்கி அசத்தினர். மாணவிகள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று கும்மியடித்து உரலில் மஞ்சள் இடித்து தானியங்களை சொளவில் புடைத்து உறியடித்து பொங்கலிட்டனர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் அருண், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். மாணவ மாணவிகள் முளைப்பாரி சுமந்து கிராமிய பாடல்களை பாடி மாட்டு வண்டியில் சென்று பொங்கலிட்டு மகிழ்ந்தனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள் விஜய கோபாலன், செல்வ லட்சுமி, ரமேஷ், கற்குவேல்ராஜ், செல்வம், செல்லத்துரை, ஆனந்தகுமார், பிரியங்கா, மற்றும் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


