2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று புது டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர் . இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர் . இந்தத் தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டது.
டிசம்பர் 13, 2001 அன்று உள்துறை அமைச்சகம் மற்றும் நாடாளுமன்றத்தின் அடையாள ஸ்டிக்கரின் போலி ஒட்டிய ஊர்தியில் ஐந்து தீவிரவாதிகள் நாடாளுமன்றத்திற்குள் ஊடுருவினர். சம்பவத்திற்கு 40 நிமிடங்கள் முன்பு தான் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அப்போதைய உள்துறை அமைச்சர் லால் கிருஷ்ண அத்வானி உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல்வேறு அரசு அதிகாரிகளும் வளாகத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. தீவிரவாதிகள் வசம் ஏகே47 ரக துப்பக்கிகள், கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகள் முதலியன இருந்தன.தீவிரவாதிகள், பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ. எஸ். ஐ.-யின் வழிகாட்டலின் பேரில் இத்தாக்குதலை நிகழ்த்தியதாகத் தில்லி காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
தீவிரவாதிகள் தங்கள் வாகனத்தை வளாகத்தின் உள் இருந்த அன்றைய குடியரசு துணைத் தலைவர் திரு.கிருஷ்ண காந்த் அவர்களின் வாகனத்தின் மீது மோதி பின் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். குடியரசு துணைத் தலைவரின் பாதுகாப்பு காவலர்களும், பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுடத் தொடங்கி, வளாகத்தின் மதில் கதவுகளை அடைத்தனர்.
தீவிரவாதிகளை முதலில் கவனித்து எச்சரிக்கை எழுப்பிய, கமலேஷ் குமாரி என்ற மத்திய சேமக் காவல் படைக் காவலர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். தீவிரவாதி ஒருவன் சுடப்பட்டபோது அவன் அணிந்திருந்த வெடிகுண்டு தாங்கிய தற்கொலை உடுப்பு வெடித்ததில் துப்பாக்கி தாங்கிய மேலும் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஐந்து காவலர், ஒரு நாடாளுமன்ற பாதுகாவலர் மற்றும் ஒரு தோட்டக்காரரும் பலியாயினர். மேலும் பதினெட்டு பேர் காயமுற்றனர். பலியானோரின் மொத்த எண்ணிக்கை 14 மற்றும் காயமுற்றோரின் எண்ணிக்கை 22-உம் ஆகும்[9]. மந்திரிகள், நாடாளுமன்ற அவை உறுப்பினர்கள் எவருக்கும் எந்த பாதிப்பும் நேரவில்லை


