அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களம் தற்போது பெரும் மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுகவின் ஒரு பிரிவினர் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ள நிகழ்வு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகத் தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதிமுகவின் மூத்த நிர்வாகி வழக்கறிஞர் செங்குட்டுவன் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டர்களில், எடப்பாடி பழனிசாமியின் படத்துடன் “எதையும் தாங்கும் இதயமே! மீண்டும் வா…” என்ற வாசகங்கள் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளன. இது கட்சியின் தற்போதைய இக்கட்டான சூழலில், எடப்பாடி பழனிசாமி மீண்டு வருவார் என்ற தொண்டர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், அதிமுகவின் ஒரு தரப்பு தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளது. ஆனால், தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள், தொண்டர்கள் இன்னும் அவரது தலைமையையே உறுதியாக நம்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. பழைய பேருந்து நிலையம், வி.வி.டி சிக்னல் மற்றும் முக்கிய வீதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டர்கள், அவ்வழியாகச் செல்லும் பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


