தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று உலகக் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றுவதற்கான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டு குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தொழிலாளர் துறையின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்புப் பொதுக் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தனது கையொப்பமிட்டு முறைப்படி தொடங்கி வைத்தார்.
மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தொழிலாளர் துறை சார்பில் விழிப்புணர்வுப் பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வாகனத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மற்றும் ஒட்டுவில்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஒட்டி, விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முறைப்படுத்தினார்.


