தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வருகிற 17ஆம்தேதி முதல் 26ம் தேதி வரை ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்பட உள்ளது
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளினை நினைவுகூரும் வகையில் ஒரு வார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ளது.
இவ்வாண்டு ஆட்சிமொழிச் சட்ட வாரம் 17.12.2025 முதல் 26.12.2025 வரை ஒருவார காலம் நடைபெற உள்ளது.
ஆட்சிமொழிச் சட்ட வாரவிழாவின் இரண்டாம் நாளான 18.12.2025 அன்று அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள், கல்லூரி மாணவர்களுடன் இணைந்து தமிழ் சார்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வுப் பேரணி தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கி முத்து நகர் கடற்கரையில் நிறைவடைய உள்ளது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும் ஆட்சிமொழிச்சட்டம் தொடர்பான பட்டிமன்றம், அரசு பணியாளர்களுக்கு கணினிப் பயிற்சி, மின்காட்சியுரை, தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகளும் நடைபெற உள்ளன. அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் ஆட்சிமொழிச் சட்ட வாரத்தினை நினைவு கூரும் வகையில் ஒட்டுவில்லைகள் ஒட்டியும் துண்டறிக்கைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பது தொடர்பான அரசாணை வழங்கியும் கொண்டாடப்படும்.
மேலும், தொழிலாளர் துறையுடன் இணைந்து வணிகநிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வலியுறுத்தி வணிகநிறுவன உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவன அமைப்புகளைக் கொண்டு கூட்டம் நடத்தப்பெறும். இதுதவிர கல்லூரி மாணவ, மாணவிகள் பங்குபெறும் ஆட்சிமொழிப் பட்டிமன்றம், பொதுமக்கள், தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


