விசுவநாதன் ஆனந்த் (திசம்பர் 11, 1969, மயிலாடுதுறை, இந்தியா),ஓர் இந்திய சதுரங்க கிராண்ட்மாஸ்டர் மற்றும் முன்னாள் உலக சதுரங்க வாகையாளர் ஆவார். இவர் உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை ஐந்து முறை வென்றுள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பிடே தரப்பட்டியலில் 2800 ஈலோ புள்ளிகளைத் எட்டிய வெகு சிலருள் ஆனந்தும் ஒருவர். இம்மைல்கல்லை இவர் ஏப்ரல் 2006இல் அடைந்தார். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உலக சதுரங்கத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளார்.
தொடக்க வாழ்க்கையும் கல்வியும்
விசுவநாதன் ஆனந்த் 1969 ஆம் ஆண்டு திசம்பர் 11 ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.இவரது தந்தை, கிருஷ்ணமூர்த்தி விசுவநாதன், பீகாரில் உள்ள ஜமால்பூரில் கல்வி பெற்று பின்னர் தெற்கு ரயில்வேயின் பொது மேலாளராக பணியாற்றினார். இவரது தாயார் சுசீலா ஒரு இல்லத்தரசி ஆவார்.அவர் ஒரு சதுரங்க ஆர்வலராகவும், செல்வாக்கு மிக்க சமூக ஆர்வலராகவும் இருந்தார்.ஆனந்த் அவரது பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது சகோதரர் சிவக்குமார், இந்தியாவில் உள்ள குரோம்ப்டன் கிரீவ்ஸில் மேலாளராக உள்ளார். இவரது சகோதரி அனுராதா மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.இவர் தனது சகோதரியை விட 11 வயது இளையவராகவும் மற்றும் சகோதரனை விட 13 வயது இளையவராகவும் இருக்கிறார்.
ஆனந்த் தனது ஆறாவது வயதில் இருந்து தனது தாயிடமிருந்து சதுரங்கம் கற்கத் தொடங்கினார். இவரது தந்தை பிலிப்பைன்ஸ் தேசிய இரயில்வேயில் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, ஆனந்த் தனது பெற்றோருடன் 1978 முதல் 80கள் வரை மணிலாவில் வாழ்ந்தார்.அப்போதே அவர் சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.


