கோவில்பட்டி அருகே பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 6 சிறுவர், சிறுமிகள், ஓட்டுநர் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில் இருந்து பாண்டவர்மங்கலம் பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளிக்கு சுமார் 15 பேருடன் பள்ளி வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் கண்மாய் கரையோர சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது, எதிரே தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டருக்கு வழி விடுவதற்காக ஒருபுறம் ஒதுக்கியபோது, வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், வேன் ஓட்டுநர் அச்சங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த சோ.முத்துராஜ் (49), வேனில் பயணித்த உதவியாளர் த. ருக்மணி(45) மற்றும் 6 சிறுவர், சிறுமிகள் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


