விளாத்திகுளத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆடி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வரர் மற்றும் மீனாட்சிசுந்தரேஸ்வரருக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், சந்தனம், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து செவ்வரளி, மல்லிகை,வில்வ இலை உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் மாலை அணிவிக்கப்பட்டது. பிரதோஷ ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சந்திரசேகரர் உமா மகேஸ்வரி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து சிவ நாமத்துடன் நந்திகேஸ்வரர் மற்றும் மீனாட்சிசுந்தரேஸ்வரருக்கு பஞ்சமுக தீபாதாரனை காண்பிக்கப்பட்டது. இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


