தூத்துக்குடியில் குடும்ப அட்டையில் பொருட்கள் பெற கைரேகை பதிவாகாதவர்களுக்கான சிறப்பு முகாமை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில், குடும்ப அட்டையில் கைரேகை மற்றும் கண் விழிப் பதிவு விழுவதில் சிரமம் உள்ளவர்களுக்காக, அவர்களது உறவினர்கள் மூலம் பொருட்களைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குச் சிவில் சப்ளை வட்டாட்சியர் (தாசில்தார்) ஞானராஜ் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராகச் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு, பயனாளிகளுக்குப் புதிய குடும்ப அட்டைகளை வழங்கிப் பேசியதாவது: “தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது கைரேகை மற்றும் கருவிழிப் பதிவு சரியாக விழாத காரணத்தால், சிலரால் பணத்தைப் பெற முடியவில்லை என்று புகார்கள் வந்தன.
இதையடுத்து, வட்டாட்சியர் ஞானராஜ் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்குப் பணம் வழங்கப்பட்டது. இருப்பினும், வருங்காலங்களில் சிரமமின்றி ரேஷன் பொருட்களைப் பெறுவதற்காக, கைரேகை விழாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உறவினர்கள் மூலம் பொருட்களை வாங்குவதற்கு இந்த முகாம் நடத்தப்படுகிறது. இன்றைய முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவர்களது குடும்ப அட்டைகளில் உரிய மாற்றங்கள் செய்து தரப்பட்டுள்ளன.
மேலும், கடந்த 2021 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் 13 முகாம்கள் நடத்தப்பட்டு, 19,562 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 30 முகாம்கள் மூலம் 87,648 அட்டைகளும், தொழிலாளர் நல வாரியம் மூலம் 147 முகாம்கள் நடத்தப்பட்டு 28,000 பேருக்கு நலவாரிய அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. கணினி பட்டா திட்டத்தின் கீழ் 800 பேருக்குப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று முகாமிற்கு வர முடியாதவர்கள், தாலுகா அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களது குடும்ப அட்டைகளில் உரிய மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.தொடர்ந்து, 150 பேருக்குக் குடும்ப அட்டை மாற்றத்திற்கான சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின், திமுக மாநகரச் செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன், மாநகராட்சி கவுன்சிலர் ஜான், மாவட்ட மருத்துவ அணித் தலைவர் அருண் குமார், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


