திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ரூ.70 லட்சம் தங்க காசு மாலையை உபயமாக பக்தர் வழங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியைச் சேர்ந்த போஸ் என்ற பக்தர் தற்போது மதுரை கே.கே.நகரில் வசித்து வருகிறார். அரசு ஒப்பந்ததாரரான இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலவருக்கு தங்க காசு மாலையை உபயமாக வழங்குவதாக கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு வேண்டியிருந்தார்.
இதனை நிறைவேற்றுவதற்காக நேற்று போஸ் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர்கள், ரூ.70 லட்சம் மதிப்பிலான 978 கிராம் எடையுள்ள தங்க காசு மாலையை கோவில் இணை ஆணையர் கார்த்திக்கிடம் வழங்கினர். கோவில் உள்துறை கண்காணிப்பாளர் அற்புதமணி, பேஷ்கார் ரமேஷ், பணியாளர் கிட்டு சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.


