ஆறுமுகநேரியில் மண் திருட்டில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்து, ஜேசிபி, 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தாமஸ், காவலர் கார்த்திக்ராஜ் ஆகியோர் காயல்பட்டினம் புறவழிச் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, சாலையோரமுள்ள தனியார் இடத்தில் சிலர் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் திருடினராம்.
அவர்கள் டிராக்டர்கள் ஓட்டுநர்களான அடைக்கலாபுரம் சுனாமி நகர் இன்னாசிராஜ் மகன் முத்துகிருஷ்ணன் (19), ஆறுமுகனேரி காமராஜபுரம் எப்ரான் லூர்துமணி மகன் முத்துராஜ் (21), ஜேசிபி டிரைவரான ஆறுமுகனேரி பாரதிநகர் ஜேம்ஸ் மகன் ஆகாஷ் (20) என விசாரணையில் தெரியவந்தது.
உதவி ஆய்வாளர் வாசுதேவன் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்து, ஜேசிபி இயந்திரம், 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தார். அவர்களை ஆய்வாளர் திலீபன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தார்.


