ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு நடத்தினார்.
தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்து, பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்தது. தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக பல்வேறு இடங்களை மத்திய தொல்லியல் துறையினர் பார்வையிட்டு செய்தனர்.
ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிகள், மட்பாண்ட பொருட்கள் போன்றவற்றை காட்சிப்படுத்த உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கவும், மேலும் அகழாய்வுக்காக தோண்டிய குழிகளின் மீது கண்ணாடி பதித்து சைட் மியூசியம் அமைக்கவும், மத்திய தொல்லியல் துறை ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கவும் திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு இடங்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புளியங்குளத்தில் உள்ள முதுமக்கள் தாழி தகவல் மையம் அருகில் உள்ள இடங்களையும், கருங்குளம் மெயின் ரோடு பகுதிகளையும் பார்வையிட்டார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


