மின்தடை காரணமாக தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நாளை (ஜூலை 9) வியாழக்கிழமை குடிநீர் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கும் வல்லநாடு மின் பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (ஜூலை 9) வியாழக்கிழமை அன்று மாநகரில் குடிநீர் விநியோகம் இருக்காது எனத் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகரின் முக்கியக் குடிநீர் விநியோகப் பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் வரும் 09.07.2026 வியாழக்கிழமை அன்று மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக, வரும் வியாழக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும். எனவே, மாநகரப் பகுதி பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீரை முன்னதாகவே சேமித்து, அதனைச் சிக்கனமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.


