மாணவர்கள் எளிதாகக் கல்வி கடனைப் பெறுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று வங்கி மேலாளர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று எந்த உயர் கல்விக்கும் சேராத மாணவர்கள், இடைநின்ற மற்றும் சிறப்புத் தேர்வு முடிவுக்குப் பின் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான மீள் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களை 100 சதவீதம் உயர்கல்வியில் சேர்ப்பதற்காக, விண்ணப்பித்துள்ள மற்றும் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களின் நிலவரம் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மாணவர்கள் வங்கிகள் மூலம் கல்வி கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசப்பட்டது. விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏதேனும் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணங்களை ஆராய்ந்து சரி செய்து கொடுக்கவும், மாணவர்கள் எளிதாகக் கல்வி கடனைப் பெறுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தித் தரவும் வங்கி மேலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
பல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப மையங்களின் முதல்வர்கள், தங்கள் கல்லூரிகளில் நிரப்பப்படாத இடங்களை ஆராய்ந்து மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் ‘கனவு கட்டுப்பாட்டு அறைக்கு’ தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. ‘உயர்வுக்கு படி’ திட்ட ஆசிரியர்கள் மூலமாக எந்தெந்த வட்டாரங்களில் சேர்க்கையில் அதிகமான தொய்வு ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து, அம்மாணவர்கள் பல்தொழில்நுட்ப மையங்களில் சேர்வதைத் தொடர்ச்சியாக வலியுறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட மாதிரி மேல்நிலைப்பள்ளிகளில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் எவரேனும் 11ஆம் வகுப்பில் சேராமல் இருந்தால், அவர்களது இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று பெற்றோர்களிடம் மாதிரிப் பள்ளியின் சிறப்புகளை எடுத்துரைக்க வேண்டும். மாதிரிப் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வியில் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் படிப்பதற்கான முழுச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்பதைப் பெற்றோர்களுக்குத் தெளிவுபடுத்தி, சேர்க்கையை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, முன்னோடி வங்கி மேலாளர் விநாயகம் மூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், வங்கி மேலாளர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


