
திருச்செந்தூா் கோயிலில் பக்தரிடம் 39 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பெரியாா் நகரைச் சோ்ந்தவா் கணேசன் (76). ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியா். இவா், மனைவி முத்துகமலம், மகன் முத்துபாண்டி, மருமகள் சங்கீதா லட்சுமி மற்றும் பேத்திகளுடன் நேற்று காலை திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். சன்னதிகளில் தரிசனம் செய்துவிட்டு தங்க கொடிமரம் அருகே வந்தபோது அவர் வைத்திருந்த தோள் பை எடை குறைந்து காணப்பட்டது.
அதைப் பாா்த்த போது, உள்ளே துணிப்பையில் சுற்றி வைத்திருந்த 39 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருச்செந்தூா் கோயில் காவல் நிலையத்தில் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் ஆய்வாளா் சுமதி வழக்குப் பதிவு செய்துள்ளாா். விசாரணையில், கோயில் மூலஸ்தானத்தில் கணேசன் சுவாமி தரிசனம் செய்த போது, மா்ம ஆசாமி ஒருவா் தோள் பையை பிளேடால் வெட்டி நகைகள் வைத்திருந்த துணிப் பை மற்றும் பணத்தை திருடிச் செல்லும் காட்சி கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.