குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடிக் கொடை விழாவில் மஞ்சள் நீராட்டு கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்தியும், அக்னிசட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடிக் கொடை விழா கடந்த 3-ஆம் தேதி இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 6 மணி, காலை 8 மணி, மாலை 5 மணி, இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10 மணிக்கு கும்பம் வீதி உலா, பகல் 11.15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட குடத்தில் புனித நீர் கொண்டு கும்பம் எழுந்தருளல் நடந்தது.
முக்கிய வீதிகள் வழியாக கும்பம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது வழிநெடுகளிலும் வீடுகளில் வேப்பிலை மற்றும் மஞ்சள் நீர்கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டனர். மாலையில் கும்பம் கோவிலை சென்றடைந்தது. இரவு 8 மணிக்கு வில்லிசையும், இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. நள்ளிரவு 11 மணிக்கு கும்பம், அக்னிசட்டி திருவீதி உலாவும் நடந்தது.
நேற்று காலை 8 மணி, பகல் 12 மணிக்கு அன்னதானமும், இரவு 9 மணிக்கு சிறப்பு மகுடம், காலை 11 மணிக்கு கும்பம் வீதி உலா நடந்தது. மாலை 5 மணிக்கு அம்மன்கும்பம் கோவில் வந்ததும் மஞ்சள் நீராட்டு விழா கோலாகலமாக நடந்தது. விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், வேல் குத்தியும் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


