மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவன், நேற்று மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் 53 மற்றும் 54-வது வார்டுகளுக்கு உட்பட்ட தோப்புத் தெரு, வடக்குத் தெரு, கீழத் தெரு, முஸ்லிம் தெரு, காளியம்மன் கோவில் தெரு, அய்யன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்துத் தன்னை மீண்டும் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
செல்லும் இடமெல்லாம் அவருக்குப் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளைச் சுட்டிக்காட்டி அவர் ஆதரவு திரட்டினார்.
இந்தப் பிரச்சார நிகழ்வின் போது, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்டத் துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநிலப் பொறியாளர் அணித் துணைச் செயலாளர் அன்பழகன், கூட்டணி கட்சிகளின் சார்பில் ஏ.பி.சி.வி. சண்முகம், சகாயராஜ், தனலட்சுமி, தயாள லிங்கம், சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்குத் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.


