தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு கோப்பைகளை வழங்கினார்.
தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் 100 அணிகள் பங்கேற்ற கலைஞர் கோப்பை காண கிரிக்கெட் போட்டி மீள விட்டான் பெரியசாமி திடலில் வைத்து நடைபெற்றது. நாக்அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிரிக்கெட் கிளப் அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இதன் இறுதிப் போட்டியில் எம்எஸ்எம் கிரிகெட் கிளப் அணியும் விக்டரி கிரிக்கெட்கிளப் அணியும் மோதின. முதலில் ஆடிய எம்எஸ்எம் அணி 6 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சத்யராஜ் 15 பந்துகளில் 65 ரன்களும், மகாராஜா 15 பந்துகளில் 53 ரன்களும் எடுத்தனர். இதை தொடர்ந்து விளையாடிய விக்டரி கிரிக்கெட் கிளப் அணி 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் எம்எஸ்எம் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற அணிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பரிசு கோப்பைகளை வழங்கினர். முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக 30,000 வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில், திமுக மாநகர செயலாளர் ஆனந்த்சேகரன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணைச் செயலாளர் நம்பி, மாவட்ட அமைப்பாளர் பாலகுருசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


