அனைத்துலக வன்முறையற்ற நாள் (International Day of Non-Violence) என்பது மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 இல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
2007, சூன் 15 இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அக்டோபர் 2 ஆம் நாளை அனைத்துலக வன்முறையற்ற நாளாக ஏகமனதாகத் தீர்மானித்தது. உலகில் வன்முறையை ஒழித்து அமைதியை நிலை நாட்ட மகாத்மா காந்தி அரும் பாடுபட்டதை கௌரவிக்கும் பொருட்டு அவர் பிறந்த நாளை சர்வதேச வன்முறையற்ற தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சையைக் கடைப்பிடித்து அதன் உன்னதத்தை அனைவருக்கும் உணர்த்திய மகாத்மா காந்தியின் கொள்கைகளை உலக நாடுகள் அனைத்தும் பறைசாற்றி, அகிம்சையின் மகத்துவத்தை அறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. அகிம்சை, பரந்த மனப்பான்மை, மனித உரிமை, சுதந்திரம், சனநாயகம் ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பது முக்கியத்துவம் வாய்ந்தவை என அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


