
பனை தொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று பனை ஆர்வலர் மும்பையில் இருந்து பல்வேறு ஊருக்கு சென்று ஆய்வு செய்து வரும் காட்சன் சாமுவேல் கூறினார்.
பனை ஆர்வலரும், மும்பையில் இருந்து பல்வேறு பகுதிககு சென்று பனை குறித்து ஆய்வு செய்துவருபவருமான காட்சன் சாமுவேல் தூத்துக்குடி மாவட்டம் வந்தார். அவர் ஆதிச்சநல்லூர் அகழாய்வு நடந்த இடம், தேரிக்காட்டில் பனை அழியும் இடம் உள்பட பல இடங்களில் சென்று பார்வையிட்டார். பனை ஓலை மூலம் உருவம் செய்யும் கருங்குளம் பால்பாண்டியை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பின் அவர் பத்திரிக்கையாளரிடம் பேசியதாவது.
பனை மரம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகிறது. தொழிலாளர்கள் ஆர்வமும் குறைந்து வருகிறது. மேலும் ஆண்டு தோறும் பனை மரக்கணக்கெடுப்பு நடைபெறவே இல்லை. இதற்காக அரசு அமைப்புகள் இருந்தும் அவை செயல்பட வில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை தேசிய மரம் பனை மரம் தான் ஆனால் அந்த மர அழிவை பற்றி யாருமே கவலை பட்டதாக தெரியவில்லை. தற்போது நாங்கள் மும்பையில் இருந்து பனை மர விதைகளை திருமண வீடுகளில் பரிசாக கொடுத்து அதை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு இடங்களிலும் பனை விதையை பரிசாக கொடுத்து வருகிறோம். பல ஆர்வலர்கள் அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதற்கு அரசு ஆதரவு அளிக்கவேண்டும். அரசு பனையில் இருந்து இயற்க்கையாக கிடைக்கும் கள்ளு விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறினார். அவருடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் உடன் வந்தனர்.