
மருதூர் அணைக்குள் 200 மாடுகள் சிக்கின. தற்போது வரை 170 மாடுகள் மீட்கப்பட்டுள்ளது. மீதி 30 மாடுகளை இரண்டாம் நாளாக மீட்கும் பணி தொடர்கிறது.
மருதூர் அணை தாமிரபரணி நதியின் 7 வது அணைக்கட்டாகும். இந்த அணைக்கட்டு அமலை செடிகளால் நிறைந்து காணப்படுகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்தினம் கலியாவூர் அருகில் உள்ள உழக்குடியை சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட மாடுகள் மேய்ச்சலுக்காக அணைக்கட்டுக்குள் சென்றது. இதற்கிடையில் பாசனத்துக்காக தாமிரபரணியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தண்ணீர் மருதூர் அணையை நிரப்பியது. இதற்குள் அணைக்குள் மாடுகள் சிக்கி கொண்டன. பொதுமக்கள் மாட்டை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், முறப்பநாடு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மாடுகளை மீட்க சிப்காட் தீயணைப்பு படை வீரர்கள் சந்திர சேகரன் தலைமையில் வந்து சேர்ந்தனர்.
அணைக்கட்டில் தண்ணீர் இருக்கும் போது மீட்பு பணி தடை பட்டது. எனவே தாசில்தார் பொதுப்பணித்துறையினரிடம் பேசி தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுத்தார். பொதுப்பணித்துறை பாசன உதவியாளர் கல்யாணி மருதூர் கீழக்காலில் 250 கன அடிதண்ணீரை¬யும், மருதூர் மேலக்காலில் 150 கனஅடி தண்ணீரையும், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுக்கு 500 கனஅடி தண்ணீரையும் திறந்து விட்டார். இதனால் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தண்ணீர் குறைந்தது. ஆனாலும் அமலை செடிகள் அதிகமாக இருந்த காரணத்தினால் மீட்பு பணி தாமதப்பட்டது. ஊர் மக்கள் உதவியோடு தீயணைப்பு படையினர் சுமார் 100க்கும் மேற்பட்ட மாடுகளை மீட்டனர். பின் இரவு நேரமான காரணத்தினால் மீட்பு பணி தள்ளி வைக்கப்பட்டது.
மீண்டும் நேற்று காலை 6 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ்பயஸ் தலைமையில் அதிகாரிகள் கலியாவூருக்கு வந்தனர். ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படை நிலைய அதிகாரி முத்துகுமார், விஜயகுமார், ரோலன், ராமமூர்த்தி கொண்ட குழுவினர் தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்கி தேட ஆரம்பித்தனர் இவர்களுடன் உள்ளூர் இளைஞர்களும் சேர்ந்து கொண்டனர்.
காலை 11 மணிக்குள் 29 மாடுகள் உயிரோடு மீட்கப்பட்டு விட்டது. அதில் ஒரு காளைமாடு இறந்த நிலையில் மீட்கப்பட்டது. மற்ற மாடுகளை மீட்கும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் சப்கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டார்.
அதன் பின் ஜேசிபி இயந்திரம் மூலம் அமலைசெடிகள் அகற்றப்பட்டது. இது போதுமானது அல்ல என பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் அமலை செடிகள் அடர்ந்து காணப்படுவதால் வேகமாக அகற்ற இயலவில்லை.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள்கூறும் போது, ஸ்ரீவைகுண்டம் அணையில் நாம் அமலை செடிஅகற்றும் போது தண்ணீரை திறந்து விட்டு அதன் மூலம் அமலை செடிகளை ஒருபுறம் இருந்து அகற்றினோம். ஆனால் இங்கு அப்படி அல்ல. அமலையை அகற்ற மிகவும் கடினமாக உள்ளது. ஆனாலும் இன்றும் பணியை முடிக்கிவிட்டுள்ளோம். அமலை செடிகளை அகற்றி உள்ளே இருக்கும் மாடுகளை மீட்க நடவடிக்ககை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வரை மந்தைக்கு 170 மாடுகள் வந்து சேர்ந்து விட்டனர். மேலும் 30 மாடுகளை மட்டும் காணவில்லை. இதில் கன்று குட்டிகள், வயதான மாடுகள அடங்கும். இந்த மாடுகள் வெள்ளத்தில் சிக்கியிருக்குமோ என மக்கள் அஞ்சுகிறார்கள். ஒரு சில மாடுகள் எதிர்கரையில் உள்ள மருதூர் வழியாக தப்பி வந்தது. அப்படி தப்பி ஓடிய மாடுகள் மருதூர், தோணித்துறை, கான்சாபுரம், சீவலப்பேரி வழியாக தப்பியோடி இருககலாம். எனவே 20 கன்று குட்டிகள் மற்றும் வயதான மாடுகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.