இலந்தைகுளம் மேற்கு பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள இலந்தைகுளம் மேற்கு பகுதியில் சில மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைக்கும் கால்நடை வளர்ப்பதற்கும் போதுமான குடிநீர் வசதியின்றி தவித்து வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட போர்வெல் குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வரும் குடிநீர் மிகவும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், சுவையற்ற நிலையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் பலமுறை கிராம பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் அளித்தும், இதுவரை அந்த புகாரை கண்டுகொள்ளாததை கண்டித்து இன்று இலந்தைகுளம் மேற்கு பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து தங்களின் குடிநீர் பிரச்சினையை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இலந்தைகுளம் மேற்கு பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர்.
அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட அனைத்து கிராம மக்களின் பிரச்சினைகளையும் நாங்கள் மேல் இடத்திற்கு அனுப்பி உள்ளோம், விரைவில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைதொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
குடிநீர் பிரச்சினைக்காக விளாத்திகுளம் மேற்குப் பகுதி கிராம பொதுமக்களும் போலீசார்ம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்திருந்ததால் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியத.


