தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மடத்தூர்-1 அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்குக் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், முகாமினைத் தொடங்கி வைத்தார்.
நாடு தழுவிய தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டுத் தமிழ்நாடு முழுவதும் அல்பெண்டசோல் மாத்திரைகள் விநியோகிக்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் பயிற்சி பெற்ற சுகாதாரச் செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் மேற்பார்வையில் இம்மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், பள்ளிக்குச் செல்லாத சிறுவர்களுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள பேறுசார் மகளிருக்கும் அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயதுள்ள 448566 சிறார்களுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள 1,10,452 மகளிருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு 17.08.2026 அன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் இந்த குடற்புழு நீக்க மாத்திரை 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 1/2 மாத்திரை (200 mg), 2 முதல் 19 வயதுவரை உள்ள குழந்தைகள் மற்றும் 20-30 வயதுவரை உள்ள மகளிருக்கு 1 மாத்திரை (400 mg) வழங்கப்படும்.
இக்குடற்புழு மாத்திரை உட்கொள்வதினால் குழந்தைகளுக்கு குடற்புழுவினால் ஏற்படும் இரத்தசோகையை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி, அறிவுத்திறன், உடற்வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.
ஆகவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகாம்களில் தங்கள் குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவ/மாணவியர், பள்ளி செல்லா மாணவ/மாணவியர் மற்றும் மகளிரை அழைத்துவந்து குடற்புழு நீக்க மாத்திரை பெற்று பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் (தூத்துக்குடி) யாழினி மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


