தூத்துக்குடியில் பனிமயமாதா பேராலயத்தின் 444வது திருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது.
உலக பிரசித்தி பெற்ற, பசிலிக்கா அந்தஸ்து கொண்ட தூத்துக்குடி திவ்ய சந்த மரிய தஸ்நேவிஸ் மாதா என அழைக்கப்படும் பனிமயமாதா பேராலயத்தின் 444 வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழா இன்று வரையில் நடக்கிறது.
இதனை முன்னிட்டு திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலிகள், நற்கருணை ஆசீர், மறையுரை, கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதனை முன்னிட்டு பெருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரகணக்கான மக்கள் திரண்டு வந்து பனிமயமாதாவை தரிசித்து ஆசிர் பெற்று செல்கின்றனர். நேற்று விழாவின் 9ம் நாள் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2ம்திருப்பலியும் நடந்தது.
பின்னர் காலை 6.30 மணிக்கு இஞ்ஞாசியார் புரம் பங்கு மக்கள், திரு இருதய மருத்துவமனை அருட்சகோதரிகள்,திரு இருதச சபை அருட்சேகாதரிகள் ஆகியோருக்கான திருப்பலி நடந்தது. காலை 7.30 மணிக்கு பரிசுத்த பனிமய அன்னை திருத்தல பேராலய பங்கு இறைமக்கள், பங்கு பேரவை, பக்தசபையினருக்கான திருப்பலி நடந்தது. தொடர்ந்து 8.30 மணிக்கு செயின்ட் ஆன்ஸ் பள்ளி, செயின்ட் ஆன்டனீஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணாக்கருக்கான திருப்பலி ஆங்கிலத்தில் நடந்தது. 9.30 மணிக்கு அமலவை அருட்சகோதரிகள், மரியாயின் சேனையினர், பனிமயமாாசபை, மரியாயின் இயக்கம்,லூர்துமாதா இளம்பெண்கள் சபை ஆகியோருக்கான திருப்பலி நடந்தது.
பின்னர் பகல் 11.30 மணிக்கு சிறுமலர், கப்புச்சின் குருமடங்கள் சார்பில் இறை அழைத்தலுக்கான திருப்பலி நடந்தது. குருமடத்தவர்கள், துறவறத்தார், இறைமைக்கள் கலந்து கொண்டனர். மாலை 5.30 திருவிழா சிறப்பு மாலை திருப்பலியும் நடந்தது. இரவு 7 மணிக்கு கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடந்தது. ஆலய பங்கு தந்தை ஜான்செல்வம் முன்னிலை வகித்தார். பின்னர் மரியாயின் ஆன்மீகம் என்ற தலைப்பில் கோட்டார்மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை மறையுரை நிகழ்த்தினார்.
பின்னர் இரவு 9 மணிக்கு மேல் பேராலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது. பக்தர்கள் வெள்ளத்திற்கு மத்தியில் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா எனப்படும் பனிமயமாதா பவனி வந்து இறைமக்களுக்கு அருள்பாலித்தார். இந்த திருவுருவ பவனி ஆலய வளாகத்திற்குள் வலம் வந்தது. ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்து கொண்டு அனையின் அருளாசி பெற்று சென்றனர்.
இன்று (5ம்தேதி) இறுதிநாள்திருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதாவின் திருவுருபவ பவணி ஆலயவளாகத்தில் நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எஸ்பி சிவபிரசாத் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 82 சிசிடிவி கேமராக்கள், 4 ட்ரோன் கேமராக்கள் 24நேரமும் இயக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.


